Sms ch 26 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 26
வாடிய முகத்துடன் சத்யா திரும்பி நின்று வேலை செய்ய ஆரம்பித்ததும் நந்தன் தன்னுடன் பேசி கொண்டிருந்தவரிடம் ரிப்போர்ட்டை திருப்பி கொடுத்து அவரை அனுப்பிவிட்டு சத்யாவிடம் நெருங்கினான். அவன் தன் அருகில் வருகிறானோ என்று சந்தேகம் வந்த போதும் சத்யா நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் கவனமாக இருந்தாள். “Hello Good Morning Madam” என்று கொஞ்சம் குனிந்து அவள் முகத்தை பார்த்து சொன்னான் நந்தன். சத்யா லேசாக திடுக்கிட்டு நிமிர்ந்து “good......good morning” என்று தடுமாறி சொன்னாள்.
“ஹ்ம்ம் கம்பெனி முதலாளி நேரில் வந்து, குனிந்து, மேடம் என்று சொல்லி வணக்கம் செலுத்தினால் தான் மேடம் பதில் வணக்கம் சொல்வீர்கள் போல” என்று கிண்டலாக கேட்கவும் சத்யா வெடுக்கென்று கோபமாக முறைத்தாள். “நான் முதலிலேயே good morning சொல்லிவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும், நீங்கள் அதை கண்டு கொள்ளாதது போல் நின்றதும் எனக்கு தெரியும், பிறகு ஏன் என்மேல் வீணாக பழி சுமத்தி நாடகம் ஆட வேண்டும்?” என்று அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து தைரியமாக பேசுவதாக நினைத்து கேட்டாள். ஆனால் அவன் பதில் சொல்லாமல் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்த விதத்தில் “இவன் ஏன் இப்படி பார்க்கிறான்?” என்று புரியாமல் அவன் பார்வையை மேற்கொண்டு எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் தன் பார்வையை தாழ்த்தினாள் சத்யா.
அவள் தைரியமாக கேட்க ஆரம்பித்து பிறகு பார்வையை தாழ்த்தி கொண்டதை பார்த்துக்கொண்டிருந்த நந்தன் அவள் பார்க்காத நேரம் லேசாக புன்னகைத்து விட்டு “உங்களோடு தர்க்கம் செய்ய எனக்கு நேரமில்லை சத்யா மேடம், உங்களுடன் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டும், மாலை எப்போதும் போல் 5 மணிக்கு வேலையை முடிக்காமல் permission வாங்கி கொண்டு 3 மணிக்கெல்லாம் என்னை கார் பார்க்கில் சந்திக்கவும், நினைவிருக்கட்டும், முக்கியமான விஷயம்” என்று கராராக சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தான். அவன் பேசிய விதத்தில் சத்யா கொஞ்சம் அரண்டு போய்விட்டாள் என்று தான் சொல்லவேண்டும்.
“ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறான்? மேடம் மேடம் என்று வேறு சொல்கிறான்? நியாயமாக நான் தான் அவனிடம் கோபம் கொள்ள வேண்டும், உன்னால் தருண் வருத்தப்பட்டது போதும், இனி எங்களை பார்க்க வராதே என்று கோபமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தால் இவன் என்னிடம் கோபமாக பேசிவிட்டு செல்கிறான், நான் அவனுக்கு good morning சொல்லவில்லை என்று அப்பட்டமாக பொய் வேறு, முக்கியமான விஷயமாமே, red light area விஷயம் பற்றி ஏதாவது தெரிந்து இருக்குமா? அதை பற்றி விசாரிக்க தான் அழைக்கிறானோ? ஆனால் அதற்கு கார் பார்க்கில் ஏன் சந்திக்க வேண்டும்? அன்று போல் அவனுடைய ஆபீஸ் ரூமிலேயே வைத்து கேட்கலாமே, ஒன்றுமே புரியவில்லையே என்று சத்யா பல விஷயங்களை போட்டு குழப்பிக்கொண்டாள். இப்படி குழப்பிகொள்வதால் ஏதாவது பலன் இருக்க போகிறதா என்ன? நான் ஏன் இவனுக்கு இப்படி பயப்பட வேண்டும்? என்று சமாதானம் செய்து கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாள். இருந்தாலும் உள்ளுக்குள் ஏற்பட்ட படபடப்பை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. வள்ளி மதியம் சாப்பிட வர சொல்லி வற்புறுத்தியும் பசிக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாள். வள்ளியிடம் நந்தன் பேசியதை சொல்லி என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். நீ பயப்படும் அளவு ஒன்றும் இருக்காது என்று வள்ளி தேற்றினாள்.
மாலை 3 மணி ஆனதும் பின்னுக்கு இழுக்கும் கால்களை கஷ்டப்பட்டு முன்னெடுத்து வைத்து சத்யா நடந்தாள். காரில் சாய்ந்து கொண்டு நின்ற நந்தனை பார்த்து மேலும் தயங்கினாள். சத்யாவை பார்த்ததும் காரில் சாய்ந்தபடியே ஒரு காலை பின்புறமாக லேசாக மடக்கி காரில் வைத்து ஒரு காலால் ஸ்டைலாக நின்று கொண்டு, சட்டையில் மாட்டி இருந்த coolers ஐ எடுத்து கண்களில் மாட்டிக்கொண்டு நின்ற நந்தனை பார்த்து சத்யாவிற்கு எரிச்சல் வந்தது. நான் ஒருத்தி வயிற்றில் புளியை கரைக்க வந்து கொண்டிருக்கிறேன், இவன் ஏதோ கடற்கரையில் நிற்பது போல் கூலாக நிற்கிறான் என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே நடந்து வந்தாள்.
“வாங்க மேடம், இது தான் உங்கள் கடிகாரத்தில் 3 மணியா?” என்று வாட்சை பார்த்தபடியே கேட்டுவிட்டு passenger side கதவை திறந்து அமரும்படி சைகை செய்தான். “எங்கே? எதற்கு?” என்று அவள் தடுமாறினாள். “சொன்னனே, முக்கியமான விஷயம் என்று, பயப்படாமல் உட்காருங்கள், நான் கடத்திக்கொண்டு போய் கடித்து சாப்பிட்டு விடமாட்டேன்” என்று கடுகடுவென்றான்.
“இப்போது என்ன தவறாக கேட்டுவிட்டேன் என்று இவ்வளவு கோபப்படுகிறான், கண்டிப்பாக மணிமாறனிடம் என்னை பற்றி அதிகமாக கேட்டிருப்பான், அவர் என்னவெல்லாம் ஜோடித்தாரோ? அதான் என்னிடம் இப்படி கடுகடு என்கிறான்” என்று நினைத்துக்கொண்டே காரில் ஏறமாட்டேன் என்று மறுக்க நினைத்ததை மறந்து போய் காரில் ஏறி அமர்ந்தாள்.
அவன் வேகமாக டிரைவர் side சென்று கதவை திறந்து அமர்ந்து whistle அடித்துக்கொண்டே கண்ணாடியில் பார்த்து அவன் கேசத்தை சரி செய்து கொண்டு seat belt அணிந்துவிட்டு சத்யாவை பார்த்தான். அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்து விழித்தாள். “மேடம் seat belt நீங்களே போட்டுக்குவீங்களா? இல்லை நான் போட்டு விட வேண்டுமா?” என்று கேட்டான். சத்யா வேகமாக அவளே seat பெல்ட் அணிந்தாள். இளையராஜா playlist ஒன்றை play செய்தான். “Ready?” என்றான். அவள் மீண்டும் விழித்தாள். லேசாக புன்னகைத்து விட்டு காரை எடுத்தான்.
“என்ன கேட்க போகிறானோ? எப்போது கேட்க போகிறானோ?” என்றெல்லாம் யோசித்து கொண்டே வந்த சத்யாவை அவ்வப்போது திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான் நந்தன்.
சத்யாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “என்ன முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னீர்கள்?”
நந்தன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டை பார்த்தான்.
சத்யா பொறுமை இழக்க ஆரம்பித்தாள். “என்னுடைய red light area விஷயம் தானே? அன்று என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியாது, அப்படி சொல்ல வேண்டும் என்றால் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னேன், அன்று உங்களுக்கு இருந்த டென்ஷனில் மேலும் துருவாமல் விட்டு வீட்டீர்கள், ஆனால் இப்போது உங்களுக்கு அதை தெரிந்து கொண்டாக வேண்டும் இல்லையா? எல்லோருக்குமே அடுத்தவர்கள் இன்னல்களை தெரிந்து கொண்டு அசை போடுவதில் ஒரு சந்தோஷம், நீங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?” என்று ஒரே மூச்சாக கொட்டி தீர்த்தாள்.
நந்தன் அவளை கோபமாக பார்த்துவிட்டு “நான் ஏதாவது கேட்டேனா? நீயாக எதற்கு இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறாய்?” என்றான்.
“என்ன நீ வா போ என்று பேசுகிறான், அப்படி பேசாதே என்று சொல்லிவிடலாமா என்று அவனை திரும்பி முறைத்தவள் அவன் முகம் தன்னைவிட கோபமாக இருப்பதை பார்த்துவிட்டு இப்போது எதற்கு வீண்வம்பு, நாம் ஏதாவது சொல்ல போய் அவன் பாட்டுக்கு நம்மை எங்கேயாவது கூட்டிக்கொண்டு போனால் என்ன செய்வது, மரியாதை முக்கியமா? மானம் முக்கியமா? மானம் தான் என்று முடிவு செய்து வாயை மூடிக்கொண்டு வந்தாள் சத்யா.
கொஞ்ச நேரம் கழித்து நந்தன் பேசினான். “சத்யா உன் கடந்த கால வாழ்க்கையை என்னால் மாற்ற முடியுமா?” என்று கேட்டான்.
சத்யாவிற்கு அவன் கேள்வி புரியவில்லை. “நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல” என்றாள் கீழே குனிந்தபடியே.
“Do I have control over your past? Can I change it?” அவள் தயங்கியபடியே சொன்னாள். “How can you change it? Past is past. No one can change it.” என்றாள்.
“see அதை தான் சொல்கிறேன், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை, அதற்கு தீர்வு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் இருக்கிறது என்றால் அதை தெரிந்து கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. Otherwise why would I be interested in your past?”
“ஆனால் நாம் யார்? கடந்தகால வாழ்க்கையின் சேமிப்பு தானே, அதனால் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர்கள் கடந்து வந்த பாதையை வைத்து தானே தெரிந்து கொள்ள முடியும்”
“ஹ்ம்ம் ஒருவகையில் நீ சொல்வது சரி தான், ஆனால் இப்போது உன் பிரச்சனைக்கு வருவோம், first of all நான் அந்த red light area விஷயத்தை பற்றி கேட்பதற்காக உன்னை வர சொல்லவில்லை, but அந்த விஷயம் உன்னை அதிகமாகவே பாதித்து இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது, so அதை பற்றி பேசினால் உனக்கு relief ஆக இருக்கும் என்றால் நான் கேட்க தயாராக உள்ளேன்”
சத்யாவிற்கு சொல்லலாமா வேண்டாமா என்று புரியாமல் குழம்பினாள். “சொல்ல விருப்பமில்லை என்றாலும் ok” என்றான் நந்தன்.
சத்யாவிற்கு அவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும் மரியாதையும் வர ஆரம்பித்தது. “நான் இன்னொரு நாள் சொல்கிறேனே” என்றாள்.
“ok whenever you feel convenient, நீ சொல்லவில்லை என்றாலும் நான் உன்னை தவறாக நினைக்க மாட்டேன்”
சத்யாவிற்கு மனசு இலகுவானது. அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு “மறந்தேவிட்டேனே, உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்” என்றாள்.
நந்தன் அவளை கேள்விக்குறியாக பார்த்துவிட்டு “நன்றி, ஆனால் எனக்கு திருமணம் ஆகும் போது சொன்னால் நன்றாக இருக்கும்” என்றான்.
“அப்படியானால் உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா?”
“ஹாஹா யார் எனக்கு திருமணம் என்று கதை கட்டி விட்டார்கள்?”
“நீங்கள் தானே சொன்னீர்கள், கோயில், கல்யாண வேலைகள் என்று பார்த்ததில் அலுவலக வேலைகளை கவனிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னீர்களே”
நந்தன் லேசாக யோசித்துவிட்டு “ஓஹ் போன முறை ஆபீஸ்ல் வைத்து சொன்னேனே, அதுவா?” என்று அவளை பார்த்தான். அவள் ஆமாம் என்று தலை அசைக்க “அது என் தம்பியின் திருமணம் மா” என்றான்.
“ஏன் உங்களுக்கு முன் உங்கள் தம்பிக்கு திருமணம்?” என்று கேட்டுவிட்டு “sorry நான் அதிகப்படியாக பேசினால்”
“அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு யாரும் பெண் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள், அதனால் எனக்காக காத்திராமல் என் தம்பிகள், தங்கைக்கு திருமணம் செய்ய சொல்லிவிட்டேன்” என்றான் புன்னகையுடன்.
சத்யா பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டாள்.
கொஞ்ச நேர அமைதிக்கு பின் சத்யா கேட்டாள். “ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னீர்களே?”
“கொஞ்ச நேரம் கழித்து சொல்கிறேன்”
இன்னும் சில நிமிடங்கள் அமைதியாக ஓடின. கார் அமைந்தகரையில் சத்யா வீட்டின் முன் நிற்கும் போது தான் எங்கே அழைத்து வந்திருக்கிறான் என்பதையே சத்யா கவனித்தாள். சத்யா இறங்குவதற்குள் அவன் இறங்கி வந்து சத்யாவிற்கு கதவை திறந்தான். சத்யா இறங்கிவிட்டு ஒன்றும் புரியாமல் வீட்டிற்கு நடந்து கதவின் பூட்டை திறந்தாள். வாசலில் ஓரமாக நின்று “வாங்க sir” என்றாள்.
“Come on சத்யா, இந்த சார் மோர் எல்லாம் கம்பெனியில் வைத்துக்கொள்ளேன், வெளியே என்னை நந்தன் என்றே அழைக்கலாமே” என்று ஷூவை கழட்டிக்கொண்டே கூறிவிட்டு சத்யாவிற்கு முன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவன் பின்னால் வீட்டிற்குள் நுழைந்த சத்யா ஏதோ ஞாபகம் வந்தவளாய் சொன்னாள். “நான் இப்படி சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள், தயவு செய்து நீங்கள் இனிமேல் வீட்டிற்கு வராதீர்கள்” என்றாள்.
“woww வீட்டிற்கு வந்தவனை இப்படி தான் வரவேற்பதா?” என்று கூறிக்கொண்டே கூலர்ஸை கழட்டி சட்டை பையில் வைத்துவிட்டு ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பாத்திரம் தேய்க்கும் இடத்தில் கையை கழுவி விட்டு மீதி இருந்த தண்ணீரை குடித்தான்.
“நான் சொல்ல சொல்ல கேட்காமல் அடிக்கடி வந்து தருணை பார்த்தீர்கள், பிறகு திடீரென்று 15 நாட்களாக ஆளை காணவில்லை, பாவம் குழந்தை, அவன் எவ்வளவு வருத்தப்பட்டான் தெரியுமா? அங்கிள்கு கல்யாணம் ஆகி இருக்கும், பொறுப்புகள் அதிகம் ஆகி இருக்கும், அப்படி இப்படி என்று சமாதானம் செய்து வைத்தேன், இப்போது தான் ஒரு நான்கு நாட்களாக உங்களை பற்றிய நினைவில்லாமல் வீட்டு பாடங்கள் செய்கிறான், விளையாடுகிறான், மறுபடியும் உங்களை பார்த்தால் பாசமாக விளையாடுவான், மறுபடியும் நீங்கள் கொஞ்ச நாட்கள் வரவில்லை என்றால் அவன் தானே வருத்தப்படுவான், அதனால் நீங்கள் இனிமேல் வீட்டிற்கு வராதீர்கள்” என்று தலையை குனிந்தபடியே சொன்னாள்.
“அவ்வளவு தானே, lecture முடிந்ததா?” என்று கேட்டுவிட்டு அடுப்படியில் இருந்த பொருட்களை உருட்டி எதையோ தேடினான். பிறகு ஒரு தட்டை எடுத்து ஒரு பாத்திரத்தில் இருந்த சோறை வைத்தான், அதன் மீது மாங்காய் சாம்பாரை ஊற்றினான், இன்னொரு பாத்திரத்தில் இருந்த பீன்ஸ் பொரியலை எடுத்து வைத்தான். அடுப்படியில் எதையோ கண்களால் தேடிவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து கட்டிலின் மேல் சப்பணமிட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சத்யாவிற்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் வியப்பாகவும் என்ன சொல்வது செய்வது என்று புரியாமல் விழித்தாள்.
“நீ சமைத்ததா?” என்று கேட்டான்.
“இல்லை வள்ளி அக்கா சமைத்தது”
“அதானே பார்த்தேன்” என்று அவன் சொன்னவிதத்தில் கோபமடைந்து “நான் தான் சமைத்தேன்” என்றாள்.
“ ஓஹோ பரவால்ல, நல்லா தான் சமைக்கிற” என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான்.
அவன் நீர் அருந்திய சொம்பில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவன் அருகில் வைத்தாள். இன்னும் கொஞ்சம் சாதமும் வைத்து சாம்பார் ஊற்றினாள்.
“முக்கியமான விஷயம் இது தான்” என்று சாப்பாட்டை காண்பித்து விட்டு “அடுத்த முறை எங்கள் வீட்டிற்கு வரும் போது சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு என் காசில் ஹோட்டலில் நன்றாக சாப்பிட்டால் மட்டும் போதாது, அதை ஞாபகம் வைத்திருந்து வீட்டிற்கு வந்தவனுக்கு சாப்பாடு போட வேண்டும், அதை விட்டுவிட்டு இனிமேல் வராதீர்கள் என்று lecture அடிக்க கூடாது” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.
“சாப்பிட்டுகொண்டு இருக்கிறானே என்று பார்க்கிறேன், இல்லை என்றால்.....இது தான் அவன் பேச நினைத்த முக்கியமான விஷயமாம்...” என்று ஒருங்கே வந்த சிரிப்பையும் கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள் சத்யா.
“ஹய்ய்ய்ய் அங்கிள்” என்று ஓடி வர முயன்றான் தருண். “ஹேய் தருண் வா வா” என்று அவனை தன்னுடன் அமர வைத்து அவனுக்கும் ஊட்டிவிட்டான் நந்தன்.
“அங்கிள், last 4, 5 நாளா ஸ்கூலுக்கு தானே வந்தீங்க, அதனால் இன்னைக்கும் வருவீங்கன்னு நான் ஸ்கூல்லயே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாத்தேன், கடைசில பாத்தா நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க” என்று சாப்பிட்டுக்கொண்டே சிரித்தான் தருண்.
“இரு இரு அங்கிள் எப்போ உன்னை பார்க்க ஸ்கூலுக்கு வந்தார்? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றாள் சத்யா.
“அங்கிள் தான்மா அம்மாகிட்ட சொல்லாதன்னு சொல்லிட்டாரு”
சத்யா நந்தனை முறைத்தாள்.
“வீட்டிற்கு வந்தால் தான் கோபப்படுகிறாயே, அதான் ஸ்கூலுக்கு போய் தருணை பார்த்தேன்” என்றான் நந்தன்.
“ஆமாம் நான் கோபப்பட்டால் வீட்டிற்கு வர மாட்டான், இவன் வீட்டிற்கு வராமல் ஸ்கூலுக்கு சென்று தருணை பார்த்ததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்” என்று மனதிற்குள் நினைத்து கொண்டு “தருண் அதனால் தான் 4,5 நாட்களாக அங்கிள் பற்றி கேட்காமல் இருந்தாயா?”
“ஆமாம் மா” என்றான் தருண் நந்தன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டுக்கொண்டே.
“ஓஹோ அப்போ என்னை முட்டாளாக்கி விட்டு நீங்கள் இருவரும் சந்தித்து கொண்டு தான் இருந்து இருக்கிறீர்கள்” என்று கோபமாக கேட்ட சத்யாவை கண்டுகொள்ளாமல் நந்தனும் தருணும் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
சத்யா கோபத்துடன் மீதி இருந்த சாதம் சாம்பார் எல்லாவற்றையும் வைத்தாள். நந்தன் தருணிடம் பேசிக்கொண்டே கோபமாக இருந்த சத்யாவை பார்த்து புன்னகைத்தான்.
Comments
Post a Comment